இது குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கற் செய்திக்குறிப்பு:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், நாட்டின் விடுதலைக்காக போராடியவருமான தோழர் ஆர். உமாநாத் காலமானார் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
உடல் நலக்குறைவால் திருச்சி மருத்துவமனையில் உமாநாத் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி சில நாட்களுக்கு முன் கிடைத்த நிலையில், அவர் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அதற்கு மாறாக அவர் மறைந்துவிட்டதாக வெளியான செய்தியை தாங்க முடியவில்லை.
நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உமாநாத் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவர். மனித நாகரீகத்துக்கு எதிரான மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர். தொழிற்சங்க முன்னோடிகளில் ஒருவர் என்ற வகையில் தொழிலாளர்களின் நலன்களுக்காக போராடியவர்.
தோழர் உமாநாத்தின் மறைவு பொதுவுடைமை இயக்கத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
0 comments:
கருத்துரையிடுக