இது குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் முதல் அனல் மின் நிலையத்தில் இன்று காலை கொதிகலன் குழாய் அதிக அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியதில் அங்கு பணியாற்றிய முதன்மை மேலாளர் செல்வராஜ் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ர்சியும், துயரமும், வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விபத்தில் அனல்மின் நிலைய பணியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அபிஷேக், ஜோதி, பலராமன், ஒப்பந்தக்காரர் சிவலிங்கம் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தியும் அதிர்ச்சியளித்தது. கொதிகலன் குழாய் வெடித்த வேகத்தில் மின்நிலையத்தின் ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த விபத்துக்கு பராமரிப்புப் பணிகளில் அலட்சியம் காட்டப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. விபத்து நடந்த 50 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்திப் பிரிவு 1962 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டதாகும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் அந்த மின் உற்பத்திப் பிரிவின் ஆயுள் காலம் கடந்த 2012 ஆண்டே முடிவடைந்து விட்டது. அதற்குப் பிறகும் அந்த மின்னுற்பத்தி நிலையத்தைக் கைவிடாமல் தொடர்ந்து இயக்கி வந்ததன் விளைவாகவே இந்த விபத்து நடந்திருக்கிறது. இந்த விபத்துக்கு என்.எல்.சி. நிர்வாகம் தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். இந்த விபத்துக் குறித்து தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நிர்வாகத்தின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டு மேலாளர் உயிரிழந்திருப்பதும், அப்பாவி ஊழியர்கள் படுகாயமடைந்திருப்பதும் மிகுந்த வருத்தமளிக்கிறது. விபத்தில் காயமடைந்த பணியாளர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் அனைவரும் விரைவாக நலம் பெற என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் உயிரிழந்த மேலாளரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் அனைத்து சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
0 comments:
கருத்துரையிடுக