இது குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் மே-9 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழர்களின் வீர விளையாட்டாகவும், பண்பாட்டு அடையாளமாகவும் பார்க்கப்படும் ஏறுதழுவல் (ஜல்லிக்கட்டு) போட்டிக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தப் போட்டியை ஒழுங்குபடுத்துவதற்காக தமிழக அரசு இயற்றிய சட்டத்தையும் செல்லாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். ஏறுதழுவல் போட்டியின் நோக்கத்தை உணராமல் உச்சநீதிமன்றம் அளித்த இத்தீர்ப்பு வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஏறுதழுவல் போட்டி இப்போது திடீரென நடத்தப்படவில்லை; பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சங்க இலக்கியங்களிலேயே ஏறுதழுவல் போட்டி குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. வீரத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதப்படும் இந்தப் போட்டிகளால் காளைகளுக்கோ அல்லது அவற்றை அடக்க முயலும் காளையருக்கோ எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. காலப்போக்கில் பேராசை கொண்ட சிலர், காளைகளின் வாயில் மது ஊற்றுதல், கண்களில் மிளகாய்பொடி தூவுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாற்றுகள் எழுந்தன; இயற்கைக்கு எதிரான இந்த செயல்பாடுகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை, தடுக்கப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை. இந்த அம்சங்களையும், ஏறுதழுவல் தொடர்பான வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளின் அம்சங்களையும் கருத்தில் கொண்டு தான் ஏறுதழுவல் ஒழுங்குமுறை சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதையெல்லாம் உணராமல் ஏறுதழுவல் போட்டிக்கு எதிரான சில குற்றச்சாற்றுகளை மட்டும் மேலோட்டமாக பார்த்துவிட்டு அப்போட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது மிகப்பெரிய ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
வீரத்தின் வெளிப்பாடு, பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றைத் தாண்டி வேறு சில பெருமைகளும் ஏறுதழுவல் போட்டிக்கு உள்ளன. தமிழ் புத்தாண்டு மற்றும் தைத் திருநாளையொட்டி கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களின் ஓர் அங்கமாகவே இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. உச்சநீதிமன்ற தடை காரணமாக இப்போட்டிகள் நடத்தப்படாவிட்டால், அது பெரும் குறையாக அமைவதுடன், தமிழர்களின் உணர்வுகளையும் கடுமையாக பாதித்துவிடும். ஏறுதழுவல் போட்டியின்போது காளைகளுக்கு தீங்கு விளைவிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட வாதத்தை மட்டுமே கருத்தில் கொண்ட நீதிமன்றம் மக்களின் உணர்வுகள் தொடர்பான வினாக்களுக்கு விடை தேட மறந்துவிட்டது. மக்களின் உணர்வுகளை நீதிமன்றத்திற்கு அழுத்தமாக புரியவைக்க தமிழக அரசும் தவறி விட்டது.
ஏறுதழுவல் இல்லாத பொங்கல் கொண்டாட்டங்களை தமிழர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது. உச்சநீதிமன்றம் தடை விதித்தாலும், அதைமீறி பல இடங்களில் இத்தகைய போட்டிகள் நடத்தப்படலாம். அவற்றை அதிகாரிகள் தடுக்க முயன்றாலோ அல்லது முறைப்படுத்தப்படாத வகையில் அவை நடத்தப்பட்டாலோ விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம். இதையெல்லாம் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தமிழ்நாட்டில் ஏறுதழுவல் போட்டிகளை முழுமையான கண்காணிப்புடனும், கட்டுப்பாட்டுடனும் நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக