இது குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் மே-7 அன்று வெளியிட்ட அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்றும், இதற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. சற்று தாமதமாக கிடைத்த நீதி என்றாலும், தமிழகத்தின் உரிமைகளை இத்தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள இத்தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமை யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகும். ஆனால், திராவிடக் கட்சிகளின் அலட்சியத்தால் முல்லைப்பெரியாற்றில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை இழந்தோம். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதற்கான தீர்ப்பு கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே பெறப்பட்டது. அப்போது அணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்ததால், அப்போதே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியிருந்தால் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட்டிருக்கும். ஆனால், அப்போதிருந்த தமிழக அரசு அதை செய்யாமல் கோட்டை விட்டதால், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு சட்டம் நிறைவேற்றி நமது உரிமையைப் பறித்தது.
கேரள அரசின் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டு ஒரு புறம் சட்டப் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், இன்னொரு புறம் மக்களின் உரிமைப் போராட்டம் தொடர்ந்தது. இப்பிரச்சினையில் மக்களுக்கு ஆதரவாக பா.ம.க.வும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது. முல்லைப்பெரியாற்று உரிமையை பாதுகாப்பதற்காக 2006 ஆம் ஆண்டு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கூடலூரில் எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. நடத்தியது. அதன்பின் 2011 ஆம் ஆண்டு இறுதியில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு எதிராக கம்பம் பகுதி விவசாயிகள் தன்னெழுச்சியாக போராடியபோதும் அவர்களுக்கு பா.ம.க துணை நின்றது. இத்தகைய சூழலில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தென்மாவட்ட விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது.
வளம் கொழிக்கும் தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இதுவரை ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்தது. நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டால் அப்பகுதியில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இரு போக சாகுபடியும், சில இடங்களில் முப்போக சாகுபடியும் செய்ய முடியும். மேலும், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் அதிக தண்ணீர் கிடைக்கும். அதுமட்டுமின்றி, முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கேரள அரசு கட்டக்கூடாது என்றும், இப்போதுள்ள அணையை பராமரிக்கும் பொறுப்பு தமிழகத்திடமே இருக்கும் என்றும், இதற்கு கேரள அரசு ஒத்துழைக்கிறதா? என்பதை கண்காணிப்பதற்காக மத்திய நீர்வள ஆணையத் தலைவர் தலைமையில் மூவர் குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் தமிழகத்திற்கு மிகவும் சாதகமானதாகும்.
அதேநேரத்தில், முல்லைப்பெரியாறு பிரச்சினையை வைத்து அரசியல் லாபம் தேட முயலும் கேரள அரசியல்வாதிகள் இந்த தீர்ப்புக்கு தடை வாங்க முயற்சிப்பார்கள் என்பதால், தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு அந்த முயற்சிகளை முறியடிக்க வேண்டும். அணையின் நீர்மட்டம் தற்போது 111 அடியாக இருக்கும் நிலையில், தற்போது பெய்து வரும் மழையையும், கோடைக்காலத்தில் பெய்யும் மழையையும் பயன்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பின் 2006 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டபிறகு அணையின் நீர்மட்டத்தை அதன் முழுகொள்ளவான 152 அடியாக உயர்த்த வேண்டும். அதேநேரத்தில் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து இரு மாநில மக்களுக்கு இடையிலான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய தமிழக, கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக