இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மார்ச்18ந்தேதி அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க நுழைவாயிலில், அந்நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளரான ராஜ்குமார் என்பவரை அங்கு காவலுக்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் நேற்று துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டிருக்கிறார். இதில் அந்த தொழிலாளி மூளை சிதறி உயிரிழந்திருக்கிறார். காவல்படையினரின் இந்த கொடூரச் செயல் கண்டிக்கத்தக்கது. கொல்லப்பட்ட ஊழியரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழிலாளி கொல்லப்பட்டதை அறிந்து அங்கு கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய என்.எல்.சி. நிறுவனத்தின் மற்ற தொழிலாளர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் தமிழக காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள வெள்ளூர், வேப்பங்குறிச்சி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அப்பாவி மக்களை காரணமே இல்லாமல் காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த அடக்குமுறையும் கண்டிக்கத்தக்கது.
என்.எல்.சி. நிறுவனத்தின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் காவல் பணியை மட்டுமே பார்க்க வேண்டும். சக தொழிலாளியை சந்திப்பதற்காக வந்த ஊழியரை, எந்த விதமான கோபமூட்டுதலும் இல்லாத சூழலில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் சுட்டுக் கொன்றிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். பதற்றம் நிறைந்த எல்லைப் பகுதிகளில் கூட இப்படியெல்லாம் நிகழ்வதில்லை.
எனவே, இதை கொடூரமான கொலைக் குற்றமாக கருதி சம்பந்தப்பட்ட வீரர் மீது வழக்குப் பதிவு செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் - கொல்லப்பட்ட ராஜ்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது மனைவிக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்க வேண்டும். நீதிகேட்டு போராடிய தொழிலாளர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கைது செய்யப்பட்ட வெள்ளூர், வேப்பங்குறிச்சி மக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக