இது குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை எக்காரணத்தைக் கொண்டும் இடமாற்றம் செய்யக்கூடாது என்று டாஸ்மாக் நிறுவனத்தின் மண்டல மேலாளர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இதை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் இல்லாத ஊர்களில் கூட மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் மட்டுமே அமைக்கப்பட்டிருந்த மதுக்கடைகள் இப்போது மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவில் திறக்கப்பட்டுள்ளன. கோவில்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்ற விதி காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. பல இடங்களில் பெண்களும், குழந்தைகளும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இதைக் கண்டித்து பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களாலும், உயர்நீதிமன்ற தலையீடுகளாலும் ஏராளமான மதுக்கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் சூழலில் தான் இப்படி ஓர் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது. அரசின் இந்த உத்தரவு முற்றிலும் தவறானதாகும்.
விதிகளை மீறி அமைக்கப்பட்ட மதுக்கடைகளை மூட வேண்டும் அல்லது வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை. தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று என்னால் நிறுவப்பட்ட வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை தொடர்ந்த வழக்கில், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அகற்றும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால், நூற்றுக்கணக்கான மதுக்கடைகள் நெடுஞ்சாலை ஓரங்களில் இன்றும் செயல்பட்டு வரும் நிலையில் எந்த மதுக்கடையையும், எக்காரணத்தைக் கொண்டும் மாற்றக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பிப்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத செயலாகும்.
டாஸ்மாக் மதுக்கடைகளை ஏன் இடமாற்றம் செய்யக்கூடாது? என்பது குறித்து அந்த உத்தரவில் விளக்கமளித்துள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சவுண்டையா, மதுக்கடைகளை இடமாற்றம் செய்வதால் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். மதுக் கடைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், உடல்நலக் கேடுகள், சாலை விபத்துக்கள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் கவலையில்லை; அதிக வருவாய் ஈட்டுவது மட்டும் தான் அரசின் நோக்கம் என்பது இந்த உத்தரவில் இருந்து தெளிவாகிறது. மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் மதுவணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு செயல்படுவது கடுமையாக கண்டிக்கத் தக்கது.
மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் மக்களுக்கு எவ்வளவு தான் இலவசங்களைக் கொடுத்தாலும் அதனால் சமூகத்திற்கு பயன் ஏற்படப் போவதில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் சில வாக்குகளை வேண்டுமானால் வாங்கலாமே தவிர, மக்களின் வாழ்த்துக்களை ஒரு போதும் வாங்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
மதுவின் தீமைகளால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மது அரக்கன் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, மதுக்கடைகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்பது போன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பதை விட்டுவிட்டு, மக்களின் உணர்வுகளை மதித்து அனைத்து மதுக்கடைகளையும் மூடி, முழுமதுவிலக்கை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
1 comments:
சாராயத்தை ஒழிக்க எத்தனை முறை போராட்டம் நடத்தினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல உள்ளது . சாராயம் குடிப்பதன் மூலம் உயிரிழப்புகள் அதிகமாக நடந்தும் அதை ஒழிப்பதற்கு ஆட்சியாளர்கள் முன்வரவில்லை.
நாமக்கல் மாவட்டம்,பள்ளிபாளையம் அருகே உள்ள கொக்கராயன்பேட்டை கிராமத்தில், கடந்த 2 மாதத்துக்கு முன் பழனியப்பன் என்பவர் சாராயம் குடித்ததால் குடல் வெந்து போய் இறந்து போனார். வன்னியர் சமூகத்தை சேர்ந்த இவர் ஆளுங்கட்சியின் 30 வருட விசுவாசி. துக்கம் விசாரிக்க வந்த தொழில்துறை அமைச்சர் திரு.தங்கமணியிடம் இறந்த காரணத்தை மக்கள் எடுத்து சொல்லியும், சாராயத்தை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அமைச்சர் குமாரபாளையம் நகராட்சி, பள்ளிபாளையம் நகராட்சி மற்றும் கொக்கராயன்பேட்டை ஊராட்சி பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான வன்னியர்களின் செல்வாக்கை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே சாராயத்தை ஒழிக்க வேண்டும். அல்லது அதன்மூலம் ஏற்படும் உயிரிழப்புக்கு 5 லட்சம் இழப்பீடு அந்த குடும்பத்திற்கு தரவேண்டும். இல்லாவிடில் சாராயத்தை ஒழிக்கும் அளவுக்கு திறமை இல்லை என்று அறிவித்துவிட்டு திறமையான பாமக கட்சியிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.
கருத்துரையிடுக